Saturday, October 31, 2009

51 முதல் 60 வரை

51. தலைவன் கூற்று

     ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
     நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
     போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
     முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
5   ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி

     எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
     வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
     நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
     பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
10  பிரியின் புணர்வதுஆயின் பிரியாது,

     ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
     சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
     மனைமுதல் வினையொடும் உவப்ப,
     நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.

பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது

பாலை
பெருந்தேவனார்


52. தலைவி கூற்று

     'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,
     கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
     பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
     இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
5   "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்

     ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
     மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
     சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
     நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
10  அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என

     இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
     சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை
     இன் உயிர் கழிவது ஆயினும், நின் மகள்
     ஆய்மலர் உண்கண் பசலை
15  காம நோய்' எனச் செப்பாதீமே.

தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி, 'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது

குறிஞ்சி
நொச்சிநியமங் கிழார்


53. தலைவி கூற்று

     அறியாய், வாழி தோழி! இருள் அற
     விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
     கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
     நெடுங் கான் முருங்கை வெண் பூத் தாஅய்,
5   நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,

     வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
     கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
     உள் ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
     பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
10  விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்

     எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
     அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
     'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
     வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
15  பொருளே காதலர் காதல்;

     'அருளே காதலர்' என்றி, நீயே.

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது

பாலை
சீத்தலைச் சாத்தனார்

54. தலைவன் கூற்று

     விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
     வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம் பெயற்
     காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
     ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
5   வள் வாய் ஆழி உள் உறுபு உருள,

     கடவுக காண்குவம் - பாக! மதவு நடைத்
     தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
     கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
     படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
10  கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர்

     கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,
     மனைமனைப் படரும் நனை நகு மாலை,
     தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
     பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
15  புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்

     நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
     'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
     பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
     வருகுவைஆயின், தருகுவென் பால்' என,
20  விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி,

     திதலை அல்குல் எம் காதலி
     புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.

வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது

முல்லை
மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்


55. தாய் கூற்று

     காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
     ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
     உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
     விளி முறை அறியா வேய் கரி கானம்,
5   வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்

     கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே! ஒழிந்து யாம்
     ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
     வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
     கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
10  கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்

     பொருது புண் நாணிய சேரலாதன்
     அழி கள மருங்கின் வான் வடக்கிருந்தென,
     இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
     அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
15  பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்

     காதல் வேண்டி, எற் துறந்து
     போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.

புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது

பாலை
மாமூலனார்


56. தலைவி கூற்று

     நகை ஆகின்றே தோழி! நெருநல்
     மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
     இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
     ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
5   கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய

     காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
     மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
     தண் துறை ஊரன் திண் தார் அகலம்
     வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
10  பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்

     புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,
     எம் மனைப் புகுதந்தோனே; அது கண்டு
     மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
     'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
15  என்னும் தன்னும் நோக்கி,

     மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.

பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக, தோழிக்குத் தலைமகள் சொல்லியது

மருதம்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்


57. தலைவன் கூற்று

     சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
     நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
     வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
     பெறு நாள் யாணர் உள்ளிப், பையாந்து,
5   புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்

     குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
     இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
     பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
     குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
10  யாமே எமியம்ஆக, தாமே

     பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
     பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
     வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
     கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
15  முதுநீர் முன்துறை முசிறி முற்றி,

     களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
     அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
     பானாட் கங்குலும் பகலும்
     ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது

பாலை
நக்கீரர்


58. தலைவி கூற்று

     இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,
     மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,
     காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
     வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்
5   தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,

     கூதிர், இல் செறியும் குன்ற நாட!
     வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
     விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,
     நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
10  நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்

     தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
     பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
     மனைமரம் ஒசிய ஒற்றிப்
     பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.

சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது

குறிஞ்சி
மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்


59. தோழி கூற்று

     தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
     பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
     வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது
     வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
5   அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்

     மரம் செல மிதித்த மாஅல் போல,
     புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,
     நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
     படி ஞிமிறு கடியும் களிறே தோழி!
10  சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,

     சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,
     அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,
     இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த
     தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
15  தாம் பாராட்டிய காலையும் உள்ளார்

     வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு
     அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
     பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது

பாலை
மதுரை மருதன் இளநாகனார்


60. தோழி கூற்று

     பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
     கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
     நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
     உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
5   அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,

     கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
     திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
     ஒண் தொடி ஞெமுக்கா தீமோ தெய்ய;
     'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
10  கோதை ஆயமொடு வண்டல் தைஇ,

     ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
     கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
     கொற்றச் சோழர் குடந்தை வைத்த
     நாடு தரு நிதியினும் செறிய
15  அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.

தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது

நெய்தல்
குடவாயிற் கீரத்தனார்


No comments:

Post a Comment