Saturday, October 31, 2009

31 முதல் 40 வரை

31. தலைவி கூற்று

     நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
     புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
     'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என,
     மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
5   இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து 


     மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
     கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
     நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
     கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
10  புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 


     கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
     'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு
     வில் இலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
     தமிழ் கெழு மூவர் காக்கும்
15  மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. 


'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது


பாலை
மாமூலனார்


32. தலைவி கூற்று

     நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
     திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
     புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
     இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
5   சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் 


     குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
     'சூரர மகளிரின் நின்ற நீ மற்று
     யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
     சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
10  இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் 


     உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
     கடிய கூறி, கை பிணி விடாஅ,
     வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
     என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்
15  சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து, 


     இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
     தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
     சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
     மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
20  என் குறைப் புறனிலை முயலும் 


     அண்கணாளனை நகுகம், யாமே. 


பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்


குறிஞ்சி
நல்வெள்ளியார்


33. தலைவன் கூற்று

     வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
     "மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
     கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
     ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
5   வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் 


     வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
     இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
     செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
     மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
10  தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய் 


     வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
     யாமே எமியம் ஆக, நீயே
     ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
     வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
15  நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், 


     வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
     பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
     அன்று நம் அறியாய் ஆயினும், இன்று நம்
     செய்வினை ஆற்றுற விலங்கின்,
20  எய்துவை அல்லையோ, பிறர் நகு பொருளே? 


தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது


பாலை
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்


34. தலைவன் கூற்று

     சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
     கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
     தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
     இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
5   செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் 



     மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
     தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
     மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
     பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
10  செல்க, தேரே நல் வலம் பெறுந! 


     பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி
     துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
     துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
     செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
15  'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, 


     இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
     மழலை இன் சொல் பயிற்றும்
     நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. 



வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது



முல்லை
மதுரை மருதன் இளநாகனார்


35. தாய் கூற்று

     ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
     வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
     தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
     நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
5   முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த 


     வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
     வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
     நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
     தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
10  போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் 


     துணிந்து, பிறள் ஆயினள் ஆயினும், அணிந்து அணிந்து,
     ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
     மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல
     துஞ்சா முழவின் கோவற் கோமான்
15  நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, 


     பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
     நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
     அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! 


மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது


பாலை
குடவாயிற் கீரத்தனார்


36. தலைவி கூற்று

     பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
     கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
     ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
     கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
5   அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, 


     தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
     கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
     நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
     வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
10  திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், 

 
     நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
     வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
     கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
     ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
15  சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், 


     போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
     நார் அரி நறவின் எருமை யூரன்,
     தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
     இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
20  எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் 


     முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
     கொன்று, களம்வேட்ட ஞான்றை,
     வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! 



தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது

மருதம்
மதுரை நக்கீரர்


37. தலைவி கூற்று (அ) தோழி கூற்று

     மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
     கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
     பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
     மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
5   வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, 


     தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
     வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
     கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
     புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
10  வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, 


     கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
     கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
     கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
     வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
15  பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, 


     மருதமர நிழல், எருதொடு வதியும்
     காமர் வேனில்மன் இது,
     மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! 


தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்


பாலை
விற்றூற்று மூதெயினனார்


38. தோழி கூற்று

     விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
     தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
     அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
     கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
5   வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன், 


     வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
     தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
     ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
     ஆடாமையின் கலுழ்பு இல தேறி, 


10  நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
     கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
     மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக் குரல்
     குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
     கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;
15  பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ தேய்கு 


     'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
     கூஉம் கணஃது எம் ஊர்' என
     ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. 


தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்; தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்


குறிஞ்சி
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்


39. தலைவன் கூற்று

     'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,
     உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
     முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
     நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
5   ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து 


     ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
     படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
     முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
     காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
10  அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு 


     மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
     இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு,
     ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென,
     கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
15  அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் 


     பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
     இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
     நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
     'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின்
20  ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின் 


     கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
     நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
     வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
     ஏற்று ஏக்கற்ற உலமரல்
25  போற்றாய் ஆகலின், புலத்தியால், எம்மே! 


பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது



பாலை
மதுரைச் செங்கண்ணனார் 




40. தலைவி கூற்று

     கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
     நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
     மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
     குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
5   அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, 


     தாழை தளரத் தூக்கி, மாலை
     அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
     காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
     துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
10  அறாஅலியரோ அவருடைக் கேண்மை! 


     அளி இன்மையின் அவண் உறை முனைஇ,
     வாரற்கதில்ல தோழி! கழனி
     வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
     தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை
15  செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை 


     அகமடல் சேக்கும் துறைவன்
     இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! 


தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது


நெய்தல்
குன்றியனார் 



No comments:

Post a Comment