Saturday, October 31, 2009

1 முதல் 10 வரை

1. தலைவி கூற்று

     'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
     உருவக் குதிரை மழவர் ஓட்டிய  
     முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
     அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
5   சிறு காரோடன் பயினொடு சேர்த்திய 


     கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
     மறந்தனர் கொல்லோ தோழி! சிறந்த
     வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
     பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
10  அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், 


     நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
     அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
     உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
     வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
15  சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை 


     நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
     சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
     உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
     கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?


பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது


பாலை
மாமூலனார்


2. தோழி கூற்று

     கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
     ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
     சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
     பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
5   அறியாது உண்ட கடுவன் அயலது 


     கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
     நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
     குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
     பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
10  குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? 


     வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
     நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
     இவளும், இனையள் ஆயின், தந்தை
     அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
15  கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் 


     வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
     நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. 


பகற்குறிக் கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது


குறிஞ்சி
கபிலர்


3. தலைவன் கூற்று

     இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
     கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
     கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
     கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5   மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை 


     வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
     துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
     ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
     புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10  கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் 


     புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
     கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
     பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
     வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15  கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், 


     அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
     கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
     நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? 


முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான் தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது


பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார்


4. தோழி கூற்று

     முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
     பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
     இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
     பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
5   மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, 


     கருவி வானம் கதழ் உறை சிதறி,
     கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
     குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
     நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
10  பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த


     தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
     மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
     உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
     கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
15  நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் 


     போது அவிழ் அலரின் நாறும்
     ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. 


தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது


முல்லை
குறுங்குடி மருதனார்



5. தலைமகன் கூற்று

     அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,
     விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
     நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ,
     குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற
5   வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள், 


     கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல்,
     வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
     முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,
     பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
10  மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,



     உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்,
     மாய்த்த போல மழுகு நுனை தோற்றி,
     பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல்,
     விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
15  பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம் 


     இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு
     அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி
     அன்ன ஆக' என்னுநள் போல,
     முன்னம் காட்டி, முகத்தின் உரையா,
20  ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி,


     பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
     ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்
     தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
     மோயினள் உயிர்த்த காலை, மா மலர்
25  மணி உரு இழந்த அணி அழி தோற்றம் 


     கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி
     உழையம் ஆகவும் இனைவோள்
     பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே! 


பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது


பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ


6. தலைவி கூற்று

     அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
     அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
     இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
     மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
5   பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் 


     கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
     குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
     வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
     கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாங்கு,
10  ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, 


     நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
     'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
     மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
     மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
15  முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! 


     சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
     அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
     வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
     முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
20  பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் 


     இளமை சென்று தவத் தொல்லஃதே;
     இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? 


பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது


மருதம்
பரணர்



7. செவிலித்தாய் கூற்று

     'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
     தலை முடிசான்ற; தண் தழை உடையை;
     அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
     மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;
5   காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; 


     பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!
     பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
     ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
     தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
10  ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! 


     வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
     தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்
     இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,
     அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
15  பிற்படு பூசலின் வழிவழி ஓடி, 


     மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,
     நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
     புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,
     ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
20  ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த 


     துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
     கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. 


மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப் பிணாக்கண்டு, சொல்லியது


பாலை
கயமனார்


8. தலைமகள் கூற்று

     ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
     குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
     தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
     பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
5   அரிய அல்லமன் இகுளை! 'பெரிய 


     கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
     பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
     கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
     வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
10  படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, 


     பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
     விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
     எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
     மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
15  துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் 


     சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
     நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
     அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. 


தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது


குறிஞ்சி
பெருங்குன்றூர் கிழார்



9. தலைமகன் கூற்று

     கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின்,
     வில்லோர் தூணி வீங்கப் பெய்த
     அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,
     செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு,
5   இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் 


     உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு,
     ஆலி வானின் காலொடு பாறி,
     துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்,
     நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
10  அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் 


     கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
     தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி,
     நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
     குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து,
15  ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, 


     துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
     எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண்
     ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ,
     பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி,
20  கன்று புகு மாலை நின்றோள் எய்தி, 


     கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
     பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,
     தொடிக் கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
     நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,
25  அம் தீம் கிளவிக் குறுமகள் 


     மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? 


வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது


பாலை
கல்லாடனார்


10. தோழி கூற்று

     வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
     மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
     முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
     புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
5   நெய்தல் உண்கண் பைதல கலுழ, 


     பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
     அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
     கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
     குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
10  பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் 


     மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
     மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
     வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. 


இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது


நெய்தல்
அம்மூவனார்


No comments:

Post a Comment