41. தலைவன் கூற்று
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
5 குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப,
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
10 நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
15 அம் கலுழ் மாமை கிளைஇய,
நுண் பல் தித்தி, மாஅயோளே?
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது
பாலை
குன்றியனார்
42. தோழி கூற்று
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
5 நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
10 பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறே!
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது
குறிஞ்சி
கபிலர்
43. தலைவன் கூற்று
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
5 நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
10 மை இருங் கானம் நாறும் நறு நுதல்,
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
அளியரோ அளியர்தாமே-அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
15 இன் துணைப் பிரியும் மடமையோரே!
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது
பாலை
மதுரையாசிரியர் நல்லந்துவனார்
44. தலைவன் கூற்று
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
5 முன் இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது,
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
10 அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டெனக்,
கண்டது நோனானாகித் திண் தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
15 அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
முல்லை
குடவாயிற் கீரத்தனார்
45. தலைவி கூற்று
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
5 ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே, காதலர்; மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
10 தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
15 அலந்தனென் உழல்வென் கொல்லோ பொலந்தார்,
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
பாலை
வெள்ளிவீதியார்
46. தோழி கூற்று
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
5 அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம், வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
10 வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம்
கூறேம்; வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
15 ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
சென்றீ, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது
மருதம்
அள்ளூர் நன்முல்லையார்
47. தலைவன் கூற்று
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
5 கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
10 ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
நெடு நிலை வியன் நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி,
15 இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத் தோள், பாயும்
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.
தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது
பாலை
ஆலம்பேரி சாத்தனார்
48. தோழி கூற்று
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்' என வினவுதி; அதன் திறம்
யானும் தெற்றென உணரேன்; மேல் நாள்,
5 மலி பூஞ் சாரல், என் தோழி மாரோடு
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
10 பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்து கொண்டு,
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
15 எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி,
நாணி நின்றனெமாக, பேணி,
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப்
20 பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,
நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற, அக் குன்று கிழவோனே!
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
25 மகனே தோழி!' என்றனள்.
அதன் அளவு உண்டு கோள், மதிவல் லோர்க்கே.
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது
குறிஞ்சி
தங்கால் முடக் கொற்றனார்
49. செவிலித்தாய் கூற்று
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
5 கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள் மன்னே! அன்னோ!
10 விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியன் நகர்,
15 செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி, அகலேன் மன்னே!
உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின் கண் வருந்தியது
பாலை
வண்ணப்புறக் கந்தரத்தனார்
50. தோழி கூற்று
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
5 பகலும் நம்வயின் அகலா னாகிப்
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
மல்லல் மூதூர் மறையினை சென்று,
10 சொல்லின் எவனோ பாண! 'எல்லி
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,
கண் நிறை நீர் கொடு கரக்கும்,
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே.
தோழி பாணனுக்குச் சொல்லியது
நெய்தல்
கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
No comments:
Post a Comment