Saturday, October 31, 2009

51 முதல் 60 வரை

51. தலைவன் கூற்று

     ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
     நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
     போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
     முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
5   ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி

     எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
     வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
     நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
     பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
10  பிரியின் புணர்வதுஆயின் பிரியாது,

     ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
     சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
     மனைமுதல் வினையொடும் உவப்ப,
     நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.

பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது

பாலை
பெருந்தேவனார்


52. தலைவி கூற்று

     'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,
     கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
     பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
     இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
5   "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்

     ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
     மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
     சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
     நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு
10  அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என

     இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
     சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை
     இன் உயிர் கழிவது ஆயினும், நின் மகள்
     ஆய்மலர் உண்கண் பசலை
15  காம நோய்' எனச் செப்பாதீமே.

தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி, 'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது

குறிஞ்சி
நொச்சிநியமங் கிழார்


53. தலைவி கூற்று

     அறியாய், வாழி தோழி! இருள் அற
     விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
     கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
     நெடுங் கான் முருங்கை வெண் பூத் தாஅய்,
5   நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,

     வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
     கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
     உள் ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
     பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
10  விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்

     எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
     அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
     'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
     வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
15  பொருளே காதலர் காதல்;

     'அருளே காதலர்' என்றி, நீயே.

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது

பாலை
சீத்தலைச் சாத்தனார்

54. தலைவன் கூற்று

     விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
     வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம் பெயற்
     காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
     ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
5   வள் வாய் ஆழி உள் உறுபு உருள,

     கடவுக காண்குவம் - பாக! மதவு நடைத்
     தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
     கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
     படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
10  கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர்

     கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,
     மனைமனைப் படரும் நனை நகு மாலை,
     தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
     பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
15  புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்

     நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
     'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
     பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
     வருகுவைஆயின், தருகுவென் பால்' என,
20  விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி,

     திதலை அல்குல் எம் காதலி
     புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.

வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது

முல்லை
மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்


55. தாய் கூற்று

     காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
     ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
     உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
     விளி முறை அறியா வேய் கரி கானம்,
5   வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்

     கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே! ஒழிந்து யாம்
     ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
     வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
     கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
10  கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்

     பொருது புண் நாணிய சேரலாதன்
     அழி கள மருங்கின் வான் வடக்கிருந்தென,
     இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
     அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
15  பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்

     காதல் வேண்டி, எற் துறந்து
     போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.

புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது

பாலை
மாமூலனார்


56. தலைவி கூற்று

     நகை ஆகின்றே தோழி! நெருநல்
     மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
     இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
     ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
5   கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய

     காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
     மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
     தண் துறை ஊரன் திண் தார் அகலம்
     வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
10  பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்

     புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,
     எம் மனைப் புகுதந்தோனே; அது கண்டு
     மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
     'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
15  என்னும் தன்னும் நோக்கி,

     மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.

பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக, தோழிக்குத் தலைமகள் சொல்லியது

மருதம்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்


57. தலைவன் கூற்று

     சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
     நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
     வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
     பெறு நாள் யாணர் உள்ளிப், பையாந்து,
5   புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்

     குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
     இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
     பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
     குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
10  யாமே எமியம்ஆக, தாமே

     பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
     பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
     வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
     கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
15  முதுநீர் முன்துறை முசிறி முற்றி,

     களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
     அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
     பானாட் கங்குலும் பகலும்
     ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது

பாலை
நக்கீரர்


58. தலைவி கூற்று

     இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,
     மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,
     காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
     வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்
5   தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,

     கூதிர், இல் செறியும் குன்ற நாட!
     வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
     விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,
     நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
10  நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்

     தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
     பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
     மனைமரம் ஒசிய ஒற்றிப்
     பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.

சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது

குறிஞ்சி
மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்


59. தோழி கூற்று

     தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
     பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
     வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது
     வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
5   அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்

     மரம் செல மிதித்த மாஅல் போல,
     புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,
     நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
     படி ஞிமிறு கடியும் களிறே தோழி!
10  சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,

     சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,
     அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,
     இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த
     தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
15  தாம் பாராட்டிய காலையும் உள்ளார்

     வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு
     அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
     பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது

பாலை
மதுரை மருதன் இளநாகனார்


60. தோழி கூற்று

     பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
     கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
     நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
     உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
5   அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,

     கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
     திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
     ஒண் தொடி ஞெமுக்கா தீமோ தெய்ய;
     'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
10  கோதை ஆயமொடு வண்டல் தைஇ,

     ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
     கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
     கொற்றச் சோழர் குடந்தை வைத்த
     நாடு தரு நிதியினும் செறிய
15  அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.

தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது

நெய்தல்
குடவாயிற் கீரத்தனார்


81முதல் 90 வரை



81. தோழி கூற்று

     நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
     ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
     புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
     ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
5   இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் 


     மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
     கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
     நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
     எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
10  வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த
     செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
     ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
     மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
     மை எழில் உண்கண் கலுழ
15  ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?

பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது

பாலை
ஆலம்பேரி சாத்தனார்


82. தலைவி கூற்று

     ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
     கோடை அவ் வளி குழலிசை ஆக,
     பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
     தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
5   கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,

     மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
     இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
     மந்தி நல் அவை மருள்வன நோக்க,
     கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
10  நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்

     உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
     செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
     புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
     மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
15  பலர்தில், வாழி தோழி! அவருள்,

     ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
     ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
     நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?

தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது

குறிஞ்சி
கபிலர்


83. தலைவன் கூற்று

     வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
     சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
     கறை அடி மடப் பிடி கானத்து அலற,
     களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,

5   கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து,
     பெரும் பொழி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
     நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
     நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
     கல்லா இளையர் பெருமகன் புல்லி
10  வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,

     சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
     எய்த வந்தனவால்தாமே நெய்தல்
     கூம்பு விடு நிகர் மலர் அன்ன
     ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

பாலை
கல்லாடனார்


84. தலைவன் கூற்று

     மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
     பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
     தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
     மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
5   இரு நிலம் கவினிய ஏமுறுகாலை

     நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
     அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
     நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
     புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
10  சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே,

     எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
     அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
     கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
     தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
15  அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து,

     வினைவயின் பெயர்க்கும் தானை,
     புனைதார், வேந்தன் பாசறை யேமே!

தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது

முல்லை
மதுரை எழுத்தாளன்


85. தோழி கூற்று

     'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
     உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
     இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
     அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
5   ஆழல் வாழி, தோழி! 'சாரல்,

     ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
     கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
     முற்றா மூங்கில் முளை தருபு, ஊட்டும்
     வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
10  நல் நாள் பூத்த நாகு இள வேங்கை

     நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
     நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
     துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
     வருதும், யாம்' எனத் தேற்றிய
15  பருவம்காண் அது; பாயின்றால் மழையே.

தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

பாலை
காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்


86. தலைவன் கூற்று

     உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
     பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
     தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
     மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
5   கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;

     கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
     கேடு இல் விழுப் புகழ் நாள் தலை வந்தென,
     உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
     பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
10  முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,

     புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
     வால் இழை மகளிர் நால்வர் கூடி,
     'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
     பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,
15  நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி

     பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
     வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
     கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
     'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
20  ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,

     கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
     ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
     முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
     அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
25  நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,

     இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
     செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
     அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
     ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
30  மடம் கொள் மதைஇய நோக்கின்,

     ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.

வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉம் ஆம்

மருதம்
நல்லாவூர் கிழார்


87. தலைவன் கூற்று

     தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
     கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
     படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
     நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
5   குடுமி நெற்றி நெடு மரச் சேவல்

     தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
     கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
     எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
     அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
10  குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம்,

     நனி நீடு உழந்தனை மன்னே! அதனால்
     உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற
     வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச்
     சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
15  தாழ் இருங் கூந்தல் நம் காதலி

     நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.

வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

பாலை
மதுரைப் பேராலவாயார்

88. தோழி கூற்று

     முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை 
     ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
     பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
     புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
5   கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய

     நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
     நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
     சென்றனன் கொல்லோ தானே குன்றத்து
     இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
10  கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்

     இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
     இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
     காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,
     கொடு விரல் உளியம் கெண்டும்
15  வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது

குறிஞ்சி
ஈழத்துப் பூதன் தேவனார்


89. செவிலித்தாய் கூற்று

     தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
     உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
     உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
     புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
5   கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,

     சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
     ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
     கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
     களரி பரந்த கல் நெடு மருங்கின்,
10  விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்

     மை படு திண் தோள் மலிர வாட்டி,
     பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
     திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
     படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
15  அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,

     வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
     கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
     மெல்லென் சேவடி மெலிய ஏக
     வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
20  அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,

     இடு மணற் பந்தருள் இயலும்,
     நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது

பாலை
மதுரைக் காஞ்சிப் புலவர்


90. தோழி கூற்று

     மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
     இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
     தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
     சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
5   இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள்

     வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
     தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
     'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
     அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது
10  பெருங் கடல் முழக்கிற்று ஆகி, யாணர்,
     இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,

     கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
     'உறும்' எனக் கொள்குநர்அல்லர்
     நறு நுதல் அரிவை பாசிழை விலையே.

பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது

நெய்தல்
மதுரை மருதன் இளநாகனார்



71 முதல் 80 வரை


71. தோழி கூற்று

     நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
     பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
     நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
     சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
5   மை இல் மான் இனம் மருள, பையென

     வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
     ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
     அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
     பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
10  காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,

     ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
     கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
     எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
     உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
15  மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,

     இது கொல் வாழி, தோழி! என் உயிர்
     விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
     துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது

பாலை
அந்தி இளங்கீரனார்

72. தலைவி கூற்று (அ) தோழி கூற்று

     இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
     துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
     மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
     பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
5   குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை

     இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
     ஆறே அரு மரபினவே; யாறே
     சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
     கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
10  'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,

     ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
     ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
     இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
     நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
15  மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்

     வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
     உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
     அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
     வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
20  நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்

     ஆனா அரும் படர் செய்த
     யானே, தோழி! தவறு உடையேனே.

தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்

குறிஞ்சி
எருமை வெளியனார் மகனார் கடலனார்

73. தோழி கூற்று

     பின்னொடு முடித்த மண்ணா முச்சி
     நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;
     வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
     ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,
5   வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்,

     நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
     'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என,
     என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
     ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
10  இருவேம் நம் படர் தீர வருவது

     காணிய வம்மோ -காதல் அம் தோழி!
     கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
     மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின்,
     ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்

15  பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி
     விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
     சென்ற தேஎத்து நின்றதால், மழையே.

தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான், குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது

பாலை
எருமை வெளியனார்

74. தலைவி கூற்று

     வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,
     போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
     தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
     குருதி உருவின் ஒண் செம் மூதாய்
5   பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப,

     பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
     வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
     வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
     கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
10  மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து

     "திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,
     இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
     வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
     நின் வலித்து அமைகுவென் மன்னோ அல்கல்
15  புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற்

     கல்லாக் கோவலர் ஊதும்
     வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக் காலே!

தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது

முல்லை
மதுரைக் கவுணியன் பூதத்தனார்

75. தலைவன் கூற்று (அ) தோழி கூற்று

     "அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
     பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
     மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
     எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
5   கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,

     அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
     தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
     அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
     கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல்,
10  செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய்,

     அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
     ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
     ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
     சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
15  இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்

     தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என-
     மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
     அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
     பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
20  மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி

     ஆனா நோயை ஆக, யானே
     பிரியச் சூழ்தலும் உண்டோ,
     அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?'

'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்' எனத் தோழி சொல்லியது

பாலை
மதுரைப் போத்தனார்

76. பரத்தை கூற்று

     மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,
     தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
     இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
     நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
5   அவை புகு பொருநர் பறையின், ஆனாது,

     கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில்,
     கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
     வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
     சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,
10  ஆதிமந்தி பேதுற்று இனைய,

     சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
     அம் தண் காவிரி போல,
     கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.

'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை, தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப சொல்லியது

மருதம்
பரணர்

77. தலைவன் கூற்று

     'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
     துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
     பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
     சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
5   இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்

     குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
     கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
     பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின்,
     உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
10  தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,

     செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
     கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
     புல் அரை இத்திப் புகர் படு நீழல்
     எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
15  வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,

     ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
     பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
     திருந்துஇலை எஃகம் போல,
     அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.

தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது

பாலை
மருதன் இளநாகனார்

78. தோழி கூற்று

     'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
     இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
     வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
     பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
5   இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,

     கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
     தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
     முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
     நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென

10  வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
     நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
     என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என,
     எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
     உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
15  உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை

     வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
     செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
     தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
     யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
20  ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,

     ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
     கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
     தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
     தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது

குறிஞ்சி
மதுரை நக்கீரனார்

79. தலைவன் கூற்று

     தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
     கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
     கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
     பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
5   வன் புலம் துமியப் போகி, கொங்கர்

     படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
     சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
     அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
     நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
10  'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர

     வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
     வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
     ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
     கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
15  நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,

     கல் பிறங்கு அத்தம் போகி,
     நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

பாலை
குடவாயிற் கீரத்தனார்

80. தோழி கூற்று

     கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
     இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
     வந்தோய் மன்ற தண் கடற் சேர்ப்ப!
     நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை

5   புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
     பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்
     முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
     ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
     செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
10  இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,

     மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
     தண் நறும் பைந் தாது உறைக்கும்
     புன்னைஅம் கானல், பகல் வந்தீமே. 

இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது

நெய்தல்
மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்


61 முதல் 70 வரை

61. தோழி கூற்று

     'நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
     கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத்
     தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
     நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து
5   ஆழல் வாழி, தோழி! தாழாது, 


     உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
     வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
     அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
     அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
10  நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் 


     கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
     மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
     விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
     பழகுவர் ஆதலோ அரிதே -முனாஅது
15  முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி 


     பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
     ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
     நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே. 


தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது



பாலை
மாமூலனார் 



62. தலைவன் கூற்று

     அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
     நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,
     ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
     மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
5   மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு 


     பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
     பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
     கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
     கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
10  நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, 


     நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
     ஆகம் அடைதந் தோளே வென் வேற்
     களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
     ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
15  கடவுள் எழுதிய பாவையின், 


     மடவது மாண்ட மாஅயோளே. 


அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது


குறிஞ்சி
பரணர்

63. செவிலித்தாய் கூற்று

     கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
     திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
     பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
     கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
5   முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி 


     பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,
     கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
     சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
     அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
10  கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, 


     மன்று நிறை பைதல் கூர, பல உடன்
     கறவை தந்த கடுங் கால் மறவர்
     கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
     முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை
15  மட மயில் அன்ன என் நடை மெலி பேதை 


     தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
     'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
     சேக் கோள் அறையும் தண்ணுமை
     கேட்குநள் கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே. 


தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது


பாலை
கருவூர்க் கண்ணம் புல்லனார்


64. தலைவன் கூற்று

     களையும் இடனால் பாக! உளை அணி
     உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
     வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
     தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
5   ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்


     வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
     செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
     கடு நீர் வரித்த செந் நில மருங்கின்,
     விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
10  பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, 


     மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
     உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,
     ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
     கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
15  ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை 


     புலம்பு கொள் மாலை கேட்டொறும்
     கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. 


வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது


முல்லை
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்



65. தோழி கூற்று

     உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
     அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
     ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
     சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
5   நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் 


     பாடிச் சென்ற பரிசிலர் போல
     உவ இனி வாழி, தோழி! அவரே,
     பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
     செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
10  மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, 


     மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர்
     வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
     மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
     உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
15  கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, 


     காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
     ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,
     நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
     நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
20  அரியவால்' என அழுங்கிய செலவே! 


வேறுபட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது


பாலை
மாமூலனார்


66. தலைவி கூற்று

     'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
     மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
     செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
     சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
5   பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் 


     வாயே ஆகுதல் வாய்த்தனம் -தோழி!
     நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
     வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
     இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
10  மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து, 


     காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
     பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர்
     தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன்; தாங்காது,
     மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
15  புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக் 


     கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
     மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
     தானே புகுதந்தோனே; யான் அது
     படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
20  கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று 


     அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
     இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
     பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,
     கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
25  பழங் கண்ணோட்டமும் நலிய, 


     அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே. 


பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது


மருதம்
செல்லூர்க் கோசிகன் கண்ணனார்



67. தலைவி கூற்று

     யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
     வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
     உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
     மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
5   அரம் போழ் நுதிய வாளி அம்பின், 


     நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
     நெல்லி நீளிடை எல்லி மண்டி,
     நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
     பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
10  பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் 


     வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
     மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
     கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
     உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
15  'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு 


     நிலம் படு மின்மினி போல, பல உடன்
     இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம்
     நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே! 


பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது


பாலை
நோய்பாடியார்


68. தோழி கூற்று

     'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
     தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
     இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
     கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
5   ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை 


     ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
     முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
     பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,
     அன்னையும் கனை துயில் மடிந்தனள்; அதன்தலை
10  மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 


     வருவர்ஆயின், 'பருவம் இது' எனச்
     சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
     படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
     வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
15  இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் 


     தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
     கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
     புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
     வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
20  அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் 


     பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே. 


தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது


குறிஞ்சி
ஊட்டியார்

69. தோழி கூற்று
 
     ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
     தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
     வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
     ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
5   ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
     செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
     பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
     கான மட மரைக் கணநிரை கவரும்
     வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
10  விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் 


     பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
     அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
     நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
     மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
15  சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் 


     அம்புடைக் கையர் அரண் பல நூறி,
     நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
     சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
     தலை நாள் அலரின் நாறும் நின்
20  அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. 


'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது


பாலை
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்


70. தோழி கூற்று

     கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
     இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
     குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
     கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
5   நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே 


     அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
     பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
     வதுவை கூடிய பின்றை, புதுவது
     பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
10  கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் 


     பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
     விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
     வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
     முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
15  வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த 


     பல் வீழ் ஆலம் போல,
     ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. 


தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது


நெய்தல்
மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

41 முதல் 50 வரை

41. தலைவன் கூற்று

     வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
     கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
     எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
     நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
5   குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, 


     அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
     ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப,
     கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
     காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
10  நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய், 


     நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
     நல் தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ
     மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
     தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
15  அம் கலுழ் மாமை கிளைஇய, 


     நுண் பல் தித்தி, மாஅயோளே? 


தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது


பாலை
குன்றியனார்


42. தோழி கூற்று

     மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
     கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
     செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
     தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
5   நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச, 


     கோடை நீடிய பைது அறு காலை,
     குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
     சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
     என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
10  பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, 


     பல்லோர் உவந்த உவகை எல்லாம்
     என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
     ஓங்கித் தோன்றும் உயர் வரை
     வான் தோய் வெற்பன் வந்தமாறே! 


தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது
குறிஞ்சி


கபிலர்


43. தலைவன் கூற்று

     கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
     சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
     என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
     கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
5   நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி, 


     குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
     கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
     தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
     கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
10  மை இருங் கானம் நாறும் நறு நுதல், 


     பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
     நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
     அளியரோ அளியர்தாமே-அளி இன்று
     ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
15  இன் துணைப் பிரியும் மடமையோரே! 


தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது


பாலை
மதுரையாசிரியர் நல்லந்துவனார்


44. தலைவன் கூற்று

     வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
     தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
     முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
     ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
5   முன் இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது, 


     ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
     நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
     துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
     பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
10  அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 


     பருந்து படப் பண்ணி, பழையன் பட்டெனக்,
     கண்டது நோனானாகித் திண் தேர்க்
     கணையன் அகப்படக் கழுமலம் தந்த
     பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
15  அழும்பில் அன்ன அறாஅ யாணர், 


     பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
     பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
     தண் குடவாயில் அன்னோள்
     பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே! 


வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது


முல்லை
குடவாயிற் கீரத்தனார்


45. தலைவி கூற்று

     வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
     ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
     கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
     நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
5   ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் 


     காடு இறந்தனரே, காதலர்; மாமை,
     அரி நுண் பசலை பாஅய், பீரத்து
     எழில் மலர் புரைதல் வேண்டும். அலரே,
     அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
10  தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, 



     புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
     இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; யானே,
     காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
     ஆதிமந்தி போல, பேதுற்று
15  அலந்தனென் உழல்வென் கொல்லோ பொலந்தார், 


     கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
     வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
     உடை மதில் ஓர் அரண் போல,
     அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! 


வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது


பாலை
வெள்ளிவீதியார்


46. தோழி கூற்று

     சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
     ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
     கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
     நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
5   அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை 


     வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
     யாரையோ? நிற் புலக்கேம், வாருற்று,
     உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
     பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
10  வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம் 


     கூறேம்; வாழியர், எந்தை! செறுநர்
     களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
     ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்
     பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
15  ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; 


     சென்றீ, பெரும! நிற் தகைக்குநர் யாரோ? 


வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது


மருதம்
அள்ளூர் நன்முல்லையார்


47. தலைவன் கூற்று

     அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
     வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
     எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
     அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
5   கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி 


     விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,
     அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
     வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
     அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
10  ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின், 


     குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
     நெடு நிலை வியன் நகர் வீழ்துணைப் பயிரும்
     புலம்பொடு வந்த புன்கண் மாலை,
     'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி,
15  இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன் 


     மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
     சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
     வேய் புரை பணைத் தோள், பாயும்
     நோய் அசா வீட, முயங்குகம் பலவே. 


தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது


பாலை
ஆலம்பேரி சாத்தனார்


48. தோழி கூற்று

     'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
     'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
     நனி பசந்தனள்' என வினவுதி; அதன் திறம்
     யானும் தெற்றென உணரேன்; மேல் நாள்,
5   மலி பூஞ் சாரல், என் தோழி மாரோடு
     ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
     'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற
     ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
     ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
10  பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், 


     குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
     வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்து கொண்டு,
     'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
     வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
15  எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, 


     நாணி நின்றனெமாக, பேணி,
     'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
     மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
     பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப்
20  பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, 


     நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கிச்
     சென்றோன் மன்ற, அக் குன்று கிழவோனே!
     பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
     அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
25  மகனே தோழி!' என்றனள். 


     அதன் அளவு உண்டு கோள், மதிவல் லோர்க்கே.
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது


குறிஞ்சி
தங்கால் முடக் கொற்றனார்


49. செவிலித்தாய் கூற்று

     'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
     அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
     முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
     கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
5   கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
     குறுக வந்து, குவவுநுதல் நீவி,
     மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
     நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
     பல் கால் முயங்கினள் மன்னே! அன்னோ!
10  விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி, 


     வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
     மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
     காடு உடன்கழிதல் அறியின் தந்தை
     அல்குபதம் மிகுத்த கடிஉடை வியன் நகர்,
15  செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, 


     கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
     தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
     ஆடுவழி ஆடுவழி, அகலேன் மன்னே! 


உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின் கண் வருந்தியது


பாலை
வண்ணப்புறக் கந்தரத்தனார்

50. தோழி கூற்று

     கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
     நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
     வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
     மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
5   பகலும் நம்வயின் அகலா னாகிப் 


     பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
     இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
     'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
     மல்லல் மூதூர் மறையினை சென்று,
10  சொல்லின் எவனோ பாண! 'எல்லி 


     மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
     துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,
     கண் நிறை நீர் கொடு கரக்கும்,
     ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே. 


தோழி பாணனுக்குச் சொல்லியது


நெய்தல்
கருவூர்ப் பூதஞ்சாத்தனார்

31 முதல் 40 வரை

31. தலைவி கூற்று

     நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
     புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
     'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என,
     மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
5   இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து 


     மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
     கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
     நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
     கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
10  புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 


     கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
     'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு
     வில் இலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
     தமிழ் கெழு மூவர் காக்கும்
15  மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே. 


'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது


பாலை
மாமூலனார்


32. தலைவி கூற்று

     நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
     திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
     புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
     இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
5   சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் 


     குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
     'சூரர மகளிரின் நின்ற நீ மற்று
     யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
     சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
10  இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் 


     உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
     கடிய கூறி, கை பிணி விடாஅ,
     வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
     என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்
15  சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து, 


     இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
     தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
     சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
     மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
20  என் குறைப் புறனிலை முயலும் 


     அண்கணாளனை நகுகம், யாமே. 


பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்


குறிஞ்சி
நல்வெள்ளியார்


33. தலைவன் கூற்று

     வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
     "மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
     கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
     ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
5   வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் 


     வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
     இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
     செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
     மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
10  தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய் 


     வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
     யாமே எமியம் ஆக, நீயே
     ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
     வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
15  நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், 


     வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
     பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
     அன்று நம் அறியாய் ஆயினும், இன்று நம்
     செய்வினை ஆற்றுற விலங்கின்,
20  எய்துவை அல்லையோ, பிறர் நகு பொருளே? 


தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது


பாலை
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்


34. தலைவன் கூற்று

     சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
     கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
     தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
     இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
5   செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் 



     மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
     தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
     மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
     பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
10  செல்க, தேரே நல் வலம் பெறுந! 


     பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி
     துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
     துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
     செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
15  'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, 


     இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
     மழலை இன் சொல் பயிற்றும்
     நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. 



வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது



முல்லை
மதுரை மருதன் இளநாகனார்


35. தாய் கூற்று

     ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
     வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
     தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
     நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
5   முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த 


     வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
     வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
     நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
     தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
10  போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் 


     துணிந்து, பிறள் ஆயினள் ஆயினும், அணிந்து அணிந்து,
     ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
     மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல
     துஞ்சா முழவின் கோவற் கோமான்
15  நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, 


     பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
     நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
     அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! 


மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது


பாலை
குடவாயிற் கீரத்தனார்


36. தலைவி கூற்று

     பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
     கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
     ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
     கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
5   அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, 


     தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
     கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
     நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
     வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
10  திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், 

 
     நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
     வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
     கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
     ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
15  சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், 


     போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
     நார் அரி நறவின் எருமை யூரன்,
     தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
     இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
20  எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் 


     முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
     கொன்று, களம்வேட்ட ஞான்றை,
     வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! 



தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது

மருதம்
மதுரை நக்கீரர்


37. தலைவி கூற்று (அ) தோழி கூற்று

     மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
     கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
     பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
     மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
5   வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, 


     தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
     வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
     கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
     புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
10  வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, 


     கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
     கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
     கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
     வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
15  பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, 


     மருதமர நிழல், எருதொடு வதியும்
     காமர் வேனில்மன் இது,
     மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! 


தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்


பாலை
விற்றூற்று மூதெயினனார்


38. தோழி கூற்று

     விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
     தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
     அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
     கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
5   வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன், 


     வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
     தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
     ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
     ஆடாமையின் கலுழ்பு இல தேறி, 


10  நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
     கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
     மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக் குரல்
     குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
     கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;
15  பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ தேய்கு 


     'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
     கூஉம் கணஃது எம் ஊர்' என
     ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. 


தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்; தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்


குறிஞ்சி
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்


39. தலைவன் கூற்று

     'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,
     உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
     முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
     நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
5   ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து 


     ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
     படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
     முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
     காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
10  அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு 


     மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
     இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு,
     ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென,
     கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
15  அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் 


     பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
     இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
     நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
     'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின்
20  ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின் 


     கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
     நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
     வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
     ஏற்று ஏக்கற்ற உலமரல்
25  போற்றாய் ஆகலின், புலத்தியால், எம்மே! 


பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது



பாலை
மதுரைச் செங்கண்ணனார் 




40. தலைவி கூற்று

     கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
     நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
     மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
     குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
5   அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, 


     தாழை தளரத் தூக்கி, மாலை
     அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
     காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
     துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
10  அறாஅலியரோ அவருடைக் கேண்மை! 


     அளி இன்மையின் அவண் உறை முனைஇ,
     வாரற்கதில்ல தோழி! கழனி
     வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
     தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை
15  செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை 


     அகமடல் சேக்கும் துறைவன்
     இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! 


தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது


நெய்தல்
குன்றியனார் 



1 முதல் 10 வரை

1. தலைவி கூற்று

     'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
     உருவக் குதிரை மழவர் ஓட்டிய  
     முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
     அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
5   சிறு காரோடன் பயினொடு சேர்த்திய 


     கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
     மறந்தனர் கொல்லோ தோழி! சிறந்த
     வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
     பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
10  அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், 


     நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
     அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
     உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
     வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
15  சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை 


     நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
     சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
     உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
     கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?


பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது


பாலை
மாமூலனார்


2. தோழி கூற்று

     கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
     ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
     சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
     பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
5   அறியாது உண்ட கடுவன் அயலது 


     கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
     நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
     குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
     பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
10  குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? 


     வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
     நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
     இவளும், இனையள் ஆயின், தந்தை
     அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
15  கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் 


     வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
     நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. 


பகற்குறிக் கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது


குறிஞ்சி
கபிலர்


3. தலைவன் கூற்று

     இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
     கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
     கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
     கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5   மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை 


     வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
     துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
     ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
     புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10  கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் 


     புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
     கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
     பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
     வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15  கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், 


     அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
     கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
     நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? 


முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான் தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது


பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார்


4. தோழி கூற்று

     முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
     பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
     இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
     பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
5   மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, 


     கருவி வானம் கதழ் உறை சிதறி,
     கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
     குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
     நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
10  பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த


     தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
     மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
     உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
     கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
15  நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் 


     போது அவிழ் அலரின் நாறும்
     ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. 


தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது


முல்லை
குறுங்குடி மருதனார்



5. தலைமகன் கூற்று

     அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,
     விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
     நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ,
     குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற
5   வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள், 


     கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல்,
     வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
     முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,
     பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
10  மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,



     உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்,
     மாய்த்த போல மழுகு நுனை தோற்றி,
     பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல்,
     விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
15  பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம் 


     இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு
     அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி
     அன்ன ஆக' என்னுநள் போல,
     முன்னம் காட்டி, முகத்தின் உரையா,
20  ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி,


     பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
     ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்
     தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
     மோயினள் உயிர்த்த காலை, மா மலர்
25  மணி உரு இழந்த அணி அழி தோற்றம் 


     கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி
     உழையம் ஆகவும் இனைவோள்
     பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே! 


பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது


பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ


6. தலைவி கூற்று

     அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
     அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
     இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
     மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
5   பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் 


     கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
     குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
     வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
     கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாங்கு,
10  ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, 


     நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
     'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
     மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
     மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
15  முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! 


     சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
     அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
     வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
     முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
20  பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் 


     இளமை சென்று தவத் தொல்லஃதே;
     இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? 


பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது


மருதம்
பரணர்



7. செவிலித்தாய் கூற்று

     'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
     தலை முடிசான்ற; தண் தழை உடையை;
     அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
     மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;
5   காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; 


     பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!
     பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
     ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
     தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
10  ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! 


     வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
     தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்
     இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,
     அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
15  பிற்படு பூசலின் வழிவழி ஓடி, 


     மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,
     நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
     புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,
     ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
20  ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த 


     துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
     கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. 


மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப் பிணாக்கண்டு, சொல்லியது


பாலை
கயமனார்


8. தலைமகள் கூற்று

     ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
     குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
     தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
     பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
5   அரிய அல்லமன் இகுளை! 'பெரிய 


     கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
     பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
     கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
     வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
10  படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, 


     பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
     விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
     எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
     மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
15  துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் 


     சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
     நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
     அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. 


தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது


குறிஞ்சி
பெருங்குன்றூர் கிழார்



9. தலைமகன் கூற்று

     கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின்,
     வில்லோர் தூணி வீங்கப் பெய்த
     அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,
     செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு,
5   இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் 


     உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு,
     ஆலி வானின் காலொடு பாறி,
     துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்,
     நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
10  அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் 


     கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
     தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி,
     நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
     குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து,
15  ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, 


     துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
     எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண்
     ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ,
     பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி,
20  கன்று புகு மாலை நின்றோள் எய்தி, 


     கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
     பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,
     தொடிக் கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
     நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,
25  அம் தீம் கிளவிக் குறுமகள் 


     மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? 


வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது


பாலை
கல்லாடனார்


10. தோழி கூற்று

     வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
     மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
     முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
     புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
5   நெய்தல் உண்கண் பைதல கலுழ, 


     பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
     அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
     கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
     குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
10  பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் 


     மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
     மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
     வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. 


இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது


நெய்தல்
அம்மூவனார்